Tuesday, May 01, 2007

<>மே தினம்<>


<>சர்வதேச உழைப்பாளர்
(மே)
தினம்<>




ன்றைக்கு அரசாங்க அலுவலகமாகட்டும் அல்லது

தனியார் தொழில் நிறுவனமாகட்டும் காலையில் 8 மணிக்கு

அல்லது 9மணிக்கு வேலைக்குப் போனால் எட்டு மணி நேர வேலையை ( கொட்டாவி விடுறது... குட்டித்தூக்கம் போடுறது... சாப்பாடு.... டீக்கடையில் கொஞ்ச நேர அரட்டை... அலுவலக நேரத்தில்......

"ம்ம்ம்... அப்பறம் நேத்து அந்தப்படத்துக்கு டிக்கெட் கெடச்சதா",
"பின் லேடன் உயிரோட இல்லையாமே".... சரிசரி..வாங்க
கேண்ட்டீன் போய் டீ...சாப்பிட்டுக்கிட்டே பேசுவோம் என்ற அலசல் நேரம் உட்பட ) ஹாயா முடிச்சுட்டு ஜோரா வீட்டுக்குத் திரும்பிடுறோம்.

மேனேஜரோ இல்ல மத்தவங்களோ மாலை 5 மணிக்கு அந்த ·பைலை கொஞ்சம் பாத்துக் குடுக்க முடியுமா? என்று கேட்டால் இன்னைக்கு டயமாயிடுச்சு எல்லாம் நாளைக்குத்தான் என்று ஜம்பமாகச் சொல்லிவிட்டு கிளம்பிவிட முடிகிறது. மீறிக் கேட்டால் தகராறு... யூனியன், தொழிற்சங்கம் ஸ்டிரைக் என்ற மிரட்டல் எல்லாம் கூட வெளிப்படும். காரணம். இன்றைக்கு 8 மணி நேர வேலை என்பது உத்திரவாதப்படுத்தப்பட்ட ஒன்று.

8மணி நேரம் உழைப்பு (வேலை), 8 மணி நேரம் பொழுதுபோக்கு, 8 மணி நேரம் ஓய்வு (உறக்கம்)என்ற குரல் அங்கிங்கெனாதபடி உலக நாடுகளில் ஒலித்தது. ஒலித்தவர்களில் எண்ணற்ற குரல்வளைகள் நெறிக்கப்பட்டது.‌ஒலித்த குரல்களின் உயிர்களைக் குடித்த குண்டுகள் எத்தனை? அடித்து நொறுக்கப்பட்டு முடமக்கப்பட்ட உயிர்கள் எத்தனை? தங்கள் இன்னுயிரை ஈந்து அவர்கள் தந்த வெப்பமான எட்டுமணி நேர உத்திரவாதத்தால்தான் இன்று உலகத் தொழிலாளர்கள் குளிர்காய்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றால் அது முலாம் பூசப்படாத 24 காரட் உண்மை!

நூறு... நூத்தம்பது வருஷத்துக்கு முன்பு என்றால் இப்படி எல்லாம் சொகுசாக வேலை பார்க்க முடியுமா? 16மணி நேரம் 17 மணி நேரம் என்று உழைத்து ஒடாய்த் தேய்ந்த நம் முன்னோர்கள் புயலெனப் பொங்கி எழுந்து உழைப்பவர்களூக்கு உரிய உரிமை வேண்டும் என்று கண்ணீரும் செந்நீரும் சிந்தியதால் தான் இன்றைக்கு நாம் 8 மணி நேர வேலை என்ற சுகத்தை அனுபவிக்கிறோம். உரிய ஊதியம், சிறப்பு ஊதியம், சம்பளத்துடன் கூடிய விடுப்பு, பிரசவகாலச் சலுகைகள், இன்ன பிறசலுகைகள் என்று சுகம் காண்கிறோம். உழைப்பாளர்கள் இல்லையேல் இவ்வுலகம் இல்லை. எட்டு மணி நேரம் வேலை; ஓவர் டைம்; போனஸ், உணவறை, ஓய்வுக்கூடம், தொழிற்கூடங்களில் பொழுதுபோக்கு மன்றம், ஓய்வூதியம், இன்ன பிற வசதிகள் இன்றைக்குத் தொழிலாளர்கள் பெற்று இருக்கிறார்கள் என்றால் அதற்குப் பின்னால் எண்ணற்ற தொழிலாளர்களின் உயிர்த் தியாகமும் அவர்கள் இட்ட புரட்சி வித்தும் தான் காரணம்.


உழைப்பாளர்களின் உழைப்பை உறிஞ்சி உண்டு கொழுத்த முதலாளித்துவத்திற்கு எதிராக புரட்சிக் கொடியூன்றியது யார்? அதன் நெடிய வரலாறு கூறும் உண்மை என்ன என்று பார்ப்போமா?



1791ம் ஆண்டில் அமெரிக்காவின் பிலடெல்பியாவில் முதன் முதலாக மரவேலை செய்யும் தச்சர்கள் வேலை நேரத்தைப் பத்து மணி நேரமாகக் குறைக்க வேண்டும் என தங்கள் குரலை உயர்த்தினர். 1810ல் சமூக வியலாளர் ராபர்ட் ஓவென் இங்கிலாந்தில் பத்து மணிநேர வேலைக்கு குரல் கொடுத்தார். 1848ம் ஆண்டு பிப்ரவரியில் வேலை நேரத்தை 12 மணி நேரமாகக் குறைக்கப் படவேண்டும் என்று பிரெஞ்சுத் தொழிலாளர்கள் ஒன்று கூடி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
1835ல் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் ஒருங்கிணைந்து பொதுவேலை நிறுத்தத்துக்கு அறை கூவல் விடுத்தனர்.

1836ல் இந்த இயக்கத்தின் தொடர் போராட்டங்கள் காரணமாக முதலாளிவர்க்கம் சிறிது அசைந்து கொடுத்தனர். ஆனாலும் பலன் கிட்டவில்லை.


1871ல் கிரேட் பிரிட்டனில் டிரேட் யூனியன் ஆக்ட் என்ற சட்டத்தை கொண்டுவந்து தொழிலாளர்களை நசுக்க எத்தனித்தது. 1872ல் இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் ஒன்று திரண்டு எட்டு மணி நேர வேலைக்கு அரசு அங்கீகாரம் வழங்க வேண்டும் என்கிற தீர்மானத்தை பிரம்மாண்ட பேரணியின் இறுதியில் முடிவெடுத்தனர்.

ஆஸ்திரேலியா....

18ம் நூற்றாண்டில் ஆஸ்திரேலியாவைச் சுற்றியுள்ள பல்வேறு தீவுகளிலிருந்தும்,பிரிட்டன் போன்ற நாடுகளிலிருந்தும் கொண்டுவரப்பட்ட‌கைதிகள் மற்றும் அடிமைகளைக் கொண்டு கட்டுமானப்பணிகளுக்கு பயன்படுத்தினர். இவர்கள் இரவுபகல் பாராது கடுமையான வேலைகளைச் செய்யப் பலவந்தப்படுத்தப்பட்டனர்! பலர் சரியான உணவின்மையாலும், ஓய்வின்மையாலும் மரணத்தைத் தழுவினர். தங்களைப்பாதுகாக்க யூனியன் ஒன்றை ஏற்படுத்துவதன் மூலம் மட்டுமே தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பத் துவங்கினர். தங்களுக்கென ஒரு அமைப்பை ஏற்படுத்தமுயல்வதைத் தடுக்க ஆஸ்திரேலிய அரசாங்கம் ஐரோப்பிய நாடுகளுடன் ஆலோசித்தது. ஒருமணிநேரம் தாமதமாக வேலைக்கு வந்தாலும் அவர்களுக்கு கடுமையான சிறைத்தண்டனை அல்லது மிகக்கடுமையான வேலைகளைச் செய்யுமாறு வற்புறுத்தப்பட்டனர். இதே நேரத்தில் தி மாஸ்ட்டர் அன்ட் சர்வன்ட் என்ற சட்டத்தை ஆஸ்திரேலிய அரசாங்கம் பிரிட்டன் 1823ம் ஆண்டு இயற்றிய சட்டத்தைப்போல 1845ல் இயற்றி முதலாளித்துவ‌ வர்க்கத்துக்கு ஆதரவாகச் செயல்பட்டது.


ஏப்ரல் 21,1856ல் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் பல்கலைக் கழக வளாகத்திலிருந்து பாராளுமன்றத்துக்கு திடீரென்று கட்டிடம் கட்டும் தொழிலாளர்கள் பேரணி ஒன்றை நடத்தி அரசை ஸ்தம்பிக்கச் செய்தனர். இதுதான் ஆஸ்திரேலிய வரலாற்றில் உழைப்பாளர்கள் ஒன்று திரள வழிவகுத்ததோடு எட்டுமணி நேர வேலையை வென்றெடுக்க பின்னாளில் வழிவகுத்தது!



(முதலாளிகளுக்குச் சாதகமாக 1847ல் அமெரிக்காவிலும்,கனடாவிலும், 1856ல் நியூசிலாந்திலும், தென் ஆப்பிரிக்காவிலும், கிரேட் பிரிட்டனில் 1871லும் சட்டங்கள் இயற்றப்பட்டது.)



அமெரிக்கா.....


அன்று...1863களில்...
அமெரிக்காவில் நியூயார்க் நகர வீதிகளில் 11 வயதுச் சிறுவன் ஒருவன் கைகளில் நாளிதழ்களைச்சுமந்துகொண்டு விடிந்தும் விடியாத காலைப் பொழுதுகளில் வாய் வலிக்கக் கத்தி விற்பான். கடைசிநாளிதழ் விற்றானதும் தயாராகத் தோளில் தொங்கவிட்டிருக்கும் பையில் அவனது அடுத்த வேலைஆரம்பமாகிவிடும். அவசரவசரமாக அலுவலகம் போவோரை, அய்யா ஒங்க ஷ¥வுக்கு கொஞ்சம் பாலீஷ்போட்டு விடுறேன், குடுக்குற காசைக் குடுங்கய்யா..." என்ற கெஞ்சலோடு, அவனுடைய ஷ¥ பாலீஷ்வேலை நடக்கும். ஒருவாறு இந்த வேலையை எல்லாம் முடித்துக்கொண்டு வெவ்வேறு தெருவில் உள்ளநாலைந்து கடைகளுக்கு அடுத்தடுத்துச் சென்று பம்பரமாகக் கூட்டிப் பெருக்கி அங்குள்ள பொருட்கள்மேலுள்ள தூசி துடைத்து ஒழுங்காக அடுக்கி வைக்கவேண்டும். காலை நாலு மணிக்குத் துவங்கி பத்துமணிக்குள் இத்தனை வேலைகளையும் முடித்துவிட்டு அப்பாடா என்று அவனால் ஒரு நிம்மதிப் பெருமூச்சுகூட விடமுடியாது. ஒரு சில கடைகள், ஒரு சில அலுவலகங்கள் தருகிற கடிதங்களை எடுத்துக்கொண்டுஅந்தந்த முகவரியைத் தேடிக்கண்டுபிடித்து அந்தத் தபால்களைப் பட்டுவாடா செய்யவேண்டும். இடைப்பட்ட நேரத்தில் ஒரு ரொட்டியை வாயில் போட்டு தண்ணீர் குடித்து காலைக்கும் மதியத்துக்குமானவயித்துப்பாட்டை சரி செய்துகொள்வான். இவ்வளவு பாடும் அவனுடைய அம்மா மற்றும் ஆறு சகோதரசகோதரிகளுக்காக கால்களில் சக்கரத்தைக் கட்டிக்கொண்டு பறந்த அந்தச் ஐரிஷ் சிறுவனின் பெயர்பீட்டர் மெக் குரி ! ( Peter Mc Guire ) .


டிஸ்மிஸ்...
19ம் நூற்றாண்டுத் துவக்கத்தில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள் நியூயார்க்நகரில் காலூன்றத் துவங்கிய நேரம். அவர்கள் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறி வேறு ஒரு சுவர்க்கபுரிக்குப் போகப்போகிறோம் என்ற கனவோடு இவர்கள் நியூயார்க் நகரில் கால் பதித்தபோது அவர்களின்கனவு நொறுங்கித்தான் போனது. ஆறு குடும்பங்கள் ஒரு குடும்பம் மட்டுமே வசிக்கக்கூடிய ஒரு வீட்டில்நெருக்கியடித்து மூட்டை முடிச்சுகளாய் மாறியிருந்தனர். இரவு எப்போது ஒழியும் என்று காத்திருந்ததுபோல விடிந்தும் விடியாத... புலர்ந்தும் புலராத வெளையில் வீட்டைவிட்டு வெளியேறும் இவர்களின்ஆயிரக்கணக்கான குழந்தைகள் பீட்டரைப்போல வேலை தேடி தெருக்களில் வலம் வந்தனர். இவர்களுக்குகிடைக்கும் வேலைகள் எளிய வேலைகள் அல்ல; வேலைத் தரம் மிக மோசமாக இருந்தது. புலம் பெயர்ந்துவந்த ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் 10 மணி நேரம், 12 மணி நேரம், 14 மணி நேரம் என்றுவேலை பார்க்க கட்டாயப்படுத்தப்பட்டனர். இடைப்பட்ட நேரத்தில் சாப்பிட மிகக்குறைந்த நேரமேகொடுக்கப்பட்டது. வேலை செய்யக்கூடிய நிலையில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சரியானநேரத்துக்கு வேலைக்கு வராவிட்டால் "டிஸ்மிஸ்" தான். உடல்நிலை சரியில்லை என்றாலும் அவர்களுக்குஇரக்கம் காட்ட அங்கே யாரும் இல்லை. திண்ணை எப்போது காலியாகும் என்பது போல வேலைஇல்லாமல் காத்திருக்கும் ஆயிரக்கணக்கானவர்கள் இவர்கள் இடத்தைக் கைப்பற்றக் காத்துக்கிடந்தார்கள்.
தொழிற்சங்கம்...
பீட்டருக்கு 17 வயாதானபோது ஒரு பியானோ கடையில் வேலைக்குச் சேர்ந்தான். இது அவன் பார்த்தமற்ற வேலைகளைவிடப் பரவாயில்லாமலிருந்தது. இருந்தாலும் குறைந்த ஊதியத்தில் அதிக நேரம் வேலைபார்க்கவேண்டிய சூழ்நிலையே இருந்தது. இரவு நேரங்களில் பொருளாதாரம் மற்றும் சமூக சிந்தனைகுறித்த வகுப்புகளுக்கும் கூட்டங்களுக்கும் சென்றான். இதில் அவனைக் கவர்ந்த விஷயம் தொழிலாளர்களின்வேலைத் தரம் பற்றியதாகும். நிச்சயமற்ற வேலைகளாலும், மிகக் குறைந்த சம்பளத்தாலும், நீண்ட நேரம்வேலை பார்ப்பதாலும் தொழிலாளர்கள் உற்சாகமிழந்து சலிப்புற்ற நிலையில் களைப்படந்து போய்இருந்ததை பீட்டர் உன்னிப்பாக கவனித்தான். இந்த நிலை மாற என்ன செய்வது என்று தொழிலாளர்கள்தங்களுக்குள் பேசிப்பேசி தீர்வு கிடைகாமல் உழல்வதையும் பீட்டர் கவனிக்கத் தவறவில்லை. தொழிலாளர்களின்வாழ்வில் ஒரு வசந்தமாக அந்த வசந்தகாலம் மலரத் துவங்கிய 1872ல் பீட்டர் நியூயார்க் நகரின் மூலைமுடுக்கிலிருந்த தொழிலாளரை எல்லாம் ஒன்று படுத்தி தொழிலாளர்களுக்காக ஒரு தொழிற் சங்கம்வேண்டும் என்று பேசிய அவன் சொற்பொழிவுகளுக்கு கூட்டம் சேர்ந்தது. ஏப்ரல் மாதத்தில் நியூயார்க்நகரம் கண்டிராத வகையில் பீட்டர் தலைமையில் ஒரு லட்சம் தொழிலாளர்கள் திரண்டனர். நீண்ட வேலைநேரத்தைக் குறைக்கவேண்டும் என்ற அவர்கள் பேரணிக் கோஷம் தொழிலதிபர்களுக்கு பேரிடியாக இருந்தது.
தொழிலாளர்களுக்கு ஒரு இயக்கம் தேவைதான் என்ற நிலையை இந்தப் பேரணி ஏற்படுத்தியது. எதிர்காலத்தில்தொழிலாளர்களின் உரிமைகளைப் பேணிக்காக்க ஆங்காங்கே தொழிர்சங்க அமைப்புகளையும் பேரமைப்பையும்தோற்றுவிக்கவேண்டிய அவசியம் பற்றி தொழிலாளர்கள் மத்தியில் பீட்டர் பேசிய பேச்சுகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது.வேலையில்லாத் திண்டாட்டம் போக்கவும் அவர்களுக்கு நிவரணத் தொகை வழங்கவேண்டுமென்றும் அரசிடம்கோரிக்கைகளை பீட்டர் முன் வைத்தபோது அரசு அதை அலட்சியப்படுத்தியது. மாறாக " பொது மக்களின்அமைதிக்குப் பங்கம் ஏற்படுத்துகிற நபர் " என்ற முத்திரை குத்தப்பட்டார். பீட்டர் பார்த்த வேலையும் சிலவிஷமிகளால் பறிபோனது. தொழிலாளர்களை ஒன்று படுத்தி இயக்கம் உருவாக்குவதில் முன்னிலும் முனைப்போடுஊர் ஊராக பயணம் செய்து தொழிலாளர்கள் மத்தியில் பேசி தொழிற்சங்கம் துவங்கக் கோரினார்.1881ல் பீட்டர் மிசூரி மாநிலத்தில் (Missouri State ) உள்ள செயிண்ட் லூயிஸில் குடியேறினார். அங்குள்ளதச்சுத் தொழிலாளர்களை ஒன்று திரட்டி தொழிற்சங்கம் ஒன்றைத் துவக்கினார். தொடர்ந்து தேசிய அளவில்ஒரு மாநாட்டை சிகாகோ நகரில் கூட்டி தேசிய அளவிலான தச்சுத் தொழிலாளர் அமைப்பை உருவாக்கினார்.இவ்வமைப்புக்கு பீட்டரையே பொதுச்செயலராகத் தேர்ந்தெடுத்தனர்.


எட்டு மணி நேர வேலை...


இந்த ஒற்றுமையான தேசிய அளவிலான தொழிலாளர் இயக்கத்தைக் கண்ட அமெரிக்க மாநிலங்களில்உள்ள பிற தொழிலாளர்களிடமும் ஒரு உற்சாகம் பிறந்தது. காட்டுதீ போல பரவிய இந்த உற்சாகம்ஆலைத் தொழிலாளர்கள், பிற தொழில் நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்களும் ஆங்காஙேதொழிற்சங்கங்களை உருவாக்கி எல்லோரும் பீட்டரின் வழியில் 8 மணி நேர வேலை, வேலைப் பாதுகாப்புபோன்ற சலுகைகளைக் கோரி கிளர்ச்சிகளில் ஈடுபட்டனர். பீட்டர் மற்ற தொழிற்சங்கத்தினரோடுகூட்டுக் கூட்டங்கள் நடத்தி செப்டம்பர் மாதத்தின் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர்களுக்கானவிடுமுறை நாளாக அறிவிக்க வேண்டுமென்று அரசை வற்புறுத்தும் வகையில் தீர்மானம் ஒன்றைக்கொண்டுவந்தார். இந்த நாள் அமெரிக்கச் சுதந்திர தின நாளுக்கும் நன்றி கூறும் நாளுக்கும்இடையில் அமையவேண்டுமென்றும் குரல் கொடுப்போம் என்றார் பீட்டர்.பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.


பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம்.


1866ல்அமெரிக்காவின் பால்டிமோர் நகரில் ஜெனரல் காங்கிரஸ் தொழிலாளர்கள் எட்டுமணி நேர வேலை எங்கள் லட்சியம் என்ற பொதுக் கோரிக்கையை முன்வைத்துப் போராட்டத்தைத் துவங்கினர்.


1886 மே மாதம் 1ம் தேதி அமெரிக்காவின் பல மாநிலங்களில் முறைப்படுத்தப் பட்ட தொழிலாளர் அமைப்புகள் ஒன்று பட்ட இயக்கமாக நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை அங்காங்கே நடத்தினர். நியூயார்க் யூனியன் சதுக்கத்திலும், கென்டக்கியில் லூயிஸ்வில்லியிலும் மற்றும் பால்டிமோரில் மிகுந்த உத்வேகத்துடன் கலந்து கொண்டு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

இந்த ஆர்ப்பாட்டம் சற்று வித்தியாசமாக அநைவரின் கவனத்தை ஈர்ப்பதாக இருந்தது. வெள்ளையர் கறுப்பர் என்ற பேதமின்றி ஒருங்கிணைந்து புரட்சிக் குரல் எழுப்பினர். மெய்னி முதல் டெக்சாஸ் வரையிலும், நியூஜெர்சியிலிருந்து அலபாமா வரையிலும் ஒருங்கிணந்த தொடர் போராட்டங்கள் நடைபெற்றன.




உலகமெங்கும் " மே " மாதத்தில் தொழிலாளர் தினம் கொண்டாடும்போது ஏன் ? அமெரிக்காவில்... கனடாவில் மட்டும் செப்டெம்பர் மாதத்தில்....என்று பலர் புருவங்களை உயர்த்துகிறார்கள்?!1882ம் ஆண்டு செப்டெம்பர் 5ம் நாள் திடீரென்று நியூயார்க் நகரில் 20 ஆயிரம் பேர்கள் அடங்கிய தொழிலாளர் தின பேரணி ப்ராட்வேயில் துவங்கியது. அவர்கள் தாங்கி வந்த பதாகைகளில்" LABOR CREATS ALL WEALTH " என்றும் "EIGHT HOURS FOR WORK, EIGHT HOURSFOR REST, EIGHT HOURS FOR RECREATION !" என்ற வாசகங்கள் அமெரிக்கத் தொழிலாளர்களைவசீகரிக்கும் மந்திரச் சொல்லானது. பேரணி முடிந்ததும் தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக விருந்துண்டுமகிழ்ந்தனர்.



அன்றிரவு வானவேடிக்கைகள் நியூயார்க் நகரையே வெளிச்ச பூமியாக்கியது. இந்தவெளிச்சம் அமெரிக்கா முழுவதும் உள்ள தொழிலாளர்கள் மனதில் பிரகாசித்தது. அரசு அறிவிக்காவிட்டால்என்ன? நமக்கு நாமே விடுமுறை எடுத்துக்கொண்டு தொழிலாளர் தின பேரணி நடத்துவோம் என்றுஒவ்வொரு மாநிலத் தொழிலாளர்களும் அடுத்த ஆண்டிலிருந்து வேலைக்குச் செல்லாமல் தொழிலாளர் தினம்கொண்டாடினர்.

O0Oசிகாகோ கலகம்O0O


இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல சிகாகோவில் ஹேய் மார்க்கெட் பகுதியில் 1886ம் ஆண்டு 90,000 தொழிலாளர்கள் "எட்டு மணி நேர வேலை" என்கிற பொது கோரிக்கைக்கு பேரணி ஒன்றை அமெரிக்கத் தொழிலாளர் கூட்டமைப்பு "மே" மாதம் 4ம் தேதி ஏற்பாடு செய்தது.

சிகாகோவின் அந் நாள் மேயரும் அந்தப் பேரணியில் கலந்து கொண்டார். பேரணி அமைதியாக நடந்து முடிந்து பொதுக்கூட்டம் ஹேய் மார்க்கெட்டில் நடந்துகொண்டிருந்த வேளையில் மேயர் பொதுக்கூட்ட மேடையை விட்டு வெளியேறியதும் அங்கிருந்த காவல் துறைத் தலைவர் கூட்டத்தைக் கலைக்கத் தடியடி கண்ணீர் புகைக் குண்டுகளை வீச...... தொழிலாளர் தரப்பிலிருந்த சிலர் போலீசாரிடமிருந்த ஆபத்தான வெடிகுண்டுகளைக் கைப்பற்றி ஆயிரக்கணக்கில் குவிக்கப்பட்டிருந்த போலீசார் மீதே வீச நூற்றுக்கணக்கான காவலர்கள் காயமுற 66 காவலர்கள் உயிரிழந்தனர். 12க்கும் மேற்ப‌ட்ட‌ தொழிலாள‌ர்க‌ள் இற‌ந்த‌ன‌ர். எண்ண‌ற்ற‌ தொழிலாள‌ர்க‌ள் காய‌முற்ற‌ன‌ர்.


கிட்டத்தட்ட காவலர்கள் அதிக அளவில் உயிரிழந்த தொழிலாளர் போரட்டமாய்அன்றைய தினம் அமைந்தது....தொழிலாளர்களின் மன உறுதி, போராட்ட வேகம்எத்தகையது என்பதைக் கொஞ்சம் கற்பனைக் கன் கொண்டு பார்க்க இயலும்.


காவலர்கள் களப்பலியானதும் காவலர்களின் சினம் முழுக்க தொழிலாளர்கள் மீது திரும்ப நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கடுமையான காயங்களோடும் ஏழு தொழிலாளர்கள் இறக்கவும் நேரிட்டது. இல்லிநாய்ஸ் கவர்னர் ஜான் கடுமையான விசாரணைக்கு உத்தரவிட்டார். அரசு ஏராளமான தொழிலாளர்கள் மீது வழக்குத் தொடுத்தது. இதன் மூலம் தொழிற் சங்க அமைப்பை நசுக்கிடத் திட்டமிட்டது அரசு.தொழிலாளர்கள் தலைவர்கள் சிலரை தூக்கிட்டு அரசு கொக்கறித்தது. ஆனால் நடந்தது வேறு.


பேரியக்கம்...

சிகாகோவில் நடைபெற்ற கலகம் உலகம் முழுக்க உள்ள தொழிலாளர்களைக் கொதித்தெழ வைத்தது. இங்கிலாந்து, ஹாலந்து, ரஷ்யா, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் நாட்டுத் தொழிலாளர்களின் கடும் கண்டனத்தைப் பெற்றதோடு சிகாகோ கலகத்திற்கு காரணமான இல்லிநாய்ஸ் மாநில அரசினைக் கண்டித்து கண்டன ஊர்வலங்கள் நடத்தினர்.

பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு நிதி உதவிடவும் வழக்கு நடத்தப் போதிய நிதி அளித்திடவும் உலகெங்கும் உள்ள தொழிலாளர்கள் நிதி சேகரித்துக் கொடுத்தனர். உலகெங்கும் தொழிலாளர் அமைப்புகள் உருவாகவும் உலகலாவிய பேரியக்கமாக மலர சிகாகோ கலகம் காரணமாகிப் போனது.

அன்றைய ஜெர்மானியப் பிரதமர் பிஸ்மார்க்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக நேசக்கரம் நீட்டியதும் தொழிலாளர் வரலாற்றில் மிக முக்கியமாய் குறிப்பிடத்தக்கது.



1894 ல்..... அடிமேல் அடி வைத்தால் அம்மியும் நகரும் என்பார்களே அதுபோல அரசாங்கம் ஒருவழியாக அறிவித்தது.1894ல் காங்கிரசு ஓட்டளிக்கவே அமெரிக்கக் கூட்டரசு செப்டெம்பர் மாத முதல் திங்கட்கிழமை நாளைஅரசு விடுமுறை நாளாக அறிவித்தது.இன்றைக்கு அமெரிக்கா, கனடா நாடுகளில் செப்டெம்பர் முதல் திங்கட்கிழமையை தொழிலாளர் தினமாகக்கொண்டாடுகின்றனர்.


பல மாநிலங்களில் தொழிலாளர் தினப் பேரணிகள் கலை நிகழ்ச்சிகள் நடை பெறுவதும்தொழிலாளர்கள் கூட்டமாக ஓரிடத்திற்கு பிக்னிக் போலச் சென்று உல்லாசமாகக் கழிப்பதும் வருடந்தோறும்நடந்தேறுகிற நிகழ்வாகிவிட்டது. அரசியல்வாதிகள் கூட தங்கள் இயக்க நடவடிக்கைகளை மூட்டை கட்டி வைத்துவிட்டு இந்த நாளில் பேரணி நடத்துவதும் வழக்கமாகிவிட்டது.



பொதுவாக அமெரிக்கர்கள் தொழிலாளர் தினத்தை கோடைகாலத்தின் கடைசி நீண்ட விடுமுறை நாளாகக்கருதி பீச்சுகளிலும் புகழ்பெற்ற ஓய்விடங்களிலும் குவிந்து உல்லாசத்தின் உச்சிகளுக்குச் சென்று மகிழ்ச்சிக்கடலில் நீந்துவது வழக்கம். ஒரு நாட்டின் பொருளாதாரம் கொழிக்க உழைப்பவர்கள் தொழிலாளர்கள்!தொழிலாளர்கள் என்ற இயந்திரம் சீராக பழுதின்றி இயங்கிட அவர்கள் உற்சாகம் பெற ஒரு நாள்விடுமுறை என்ற அங்கீகாரம் நாட்டுக்கு நாடு வேறுபட்டாலும் அதற்கு மூலகர்த்தாக்களாக செயல் பட்ட பீட்டர் போன்றவர்களை இந் நாளில் நினைவு கூர்வது நாம் அவர்களுக்குச் செய்யும் மரியாதை.... இல்லையா?


கனவும் நனவும்....
தொழிலாளர் ஒற்றுமையும், தொழிலாளர் இயக்க வலிமையும் இறுதியில் "எட்டு மணி நேர வேலை" என்றஅரசின் அங்கீகாரத்தை வென்றெடுத்தன.
தொழிலாள வர்க்கத்தின் கனவு நனவானது 1888 ம் ஆண்டு மே மாதம் 1ம்தேதியாகும். முதலில் அமெரிக்காவிற்கும் கனடாவிற்கும் கிடைத்த அங்கீகாரம் படிப்படியாக ஒவ்வொரு நாடும் பெறக் காரணமாய் அமைந்தது.


1889ல் பாரீஸ் மாநகரில் 400 சர்வதேச தொழிலாளர் பிரதிதிகள் கூடினர். உலகத் தொழிலாளர்களின் பல்வேறு நலத் திட்டங்களுக்கான அடித்தளமாக அந்தக் கூட்டம் அமைந்தது. அதுமட்டுமல்ல. உழைப்பாளிகள் ஒன்று படவும்அவர்தம் கோரிக்கைகள் வென்றெடுக்கக் காரணமான மே முதலாம் நாளை உழைப்பாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடுவதென முடிவெடுத்தனர்.

1891ம் ஆண்டு மே1ம் தேதி முதன் முதலாக ரஷ்யா, பிரேசில் மற்றும் அயர்லாந்தில் "மே" தினத்தைக் கொண்டாடினர்.


சைனாவில் 1920 லும், இந்தியாவில் 1927லும் (இந்தியாவில் கல்கத்தா,
சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களில்) அமெரிக்காவில் மே தினத்தன்று ஊர்வலங்கள் நடத்தினாலும் 1905ம் வருடத்திலிருந்து வருடம்தோறும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள் கிழமையன்று தொழிலாளர் தினமாக அரசு அறிவித்து கொண்டாடுகிறது.
கனடாவும் செப்டம்பர் மாதம் முதல் திங்கள்கிழமையையே தொழிலாளர்தினமாக அங்கீகரித்து நடைமுறைப்படுத்தி வருகிறது.

தமிழகத்தில்.....

தமிழகத்தில் உழைப்போரே உயர்ந்தோர், உழைப்போருக்கே உலகம் உடமைஎன்ற கொள்கையை தன் உயிர்மூச்சோடு இணைத்துக்கொண்டு வாழ்ந்த சிங்காரவேலர் "மே" தினக் கொடியேற்றிக் கொண்டாடியதும் 1923ல் இந்துஸ்தான் லேபர் கிசான் கட்சி முகிழ்க்கவும், சிங்காரவேலரின் இருப்பிடமே தலைமையிடமாகத் திகழ்ந்தவரலாறும் தொழிலாளர்கள் மறந்துவிட முடியாத மாசற்ற உண்மையாகும்.



1908 ஆம் ஆண்டு தூத்துக்குடியில் நடைபெற்ற "கோரல் மில்' தொழிலாளர்களின் போராட்டம் குறிப்பிடத்தக்கது. 1918 ஏப்ரல் 27 அன்று "மெட்ராஸ் லேபர் யூனியன்' என்ற தொழிற்சங்கம் சென்னையில் உருவானது. இதுவே தமிழ்நாட்டில் அமைப்பு முறையில் தொடங்கப் பெற்ற முதல் தொழிற்சங்கமாகும்.


இதன் தலைவராக வாடியாவும், செயலாளராக செல்வபதியும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கு உதவியாக திரு.வி.க., சர்க்கரைச் செட்டியார் மற்றும் சிங்கார வேலர் ஆகியோர் செயல்பட்டனர். உயர் நீதிமன்றத்திற்கு எதிரேயுள்ள கடற்கரையில் இவர் தலைமையிலும், திருவல்லிக்கேணி கடற்கரையில் கிருஷ்ணசாமி சர்மா தலைமையிலும் மேதினக் கூட்டங்கள் நடைபெற்றன.

1889லிருந்து தொழிலாளர் விடுமுறை தினமாக மே முதல் நாளை இந்தியாவும் எகிப்தும் அறிவித்ததாக ஊர்ஜிதம் செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கிறது.சிங்கப்பூர் மே தினத்தை உழைப்பாளர் தினமாக கொண்டாடுவதைவழக்கமாகக் கொண்டுள்ளது.

போராடுவோம், போராடுவோம்...வெற்றி கிட்டும்வரை போராடுவோம்!இப்படை தோற்கின் எப்படை வெல்லும்!! இந்தப்படை போதுமா? இன்னும் கொஞ்சம் வேணுமா?அஞ்சோம், அஞ்சோம் அடக்குமுறை கண்டு அஞ்சோம்! தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக! போன்ற சிங்காரவேலரின் சிறப்புக் கோஷ‌ கீதங்கள் இன்றளவும் நம் செவிப்பறையில் ஆங்காங்கே விழுந்துகொண்டுதானே இருக்கிறது!



உழைப்பாளர்களுக்கான தமிழகத் தந்தை சிங்காரவேலர் அவர்களுக்கு மத்திய அரசு கடந்த ஆண்டு (2006) மார்ச் திங்கள் 2ம் நாளன்று அஞ்சல்தலை வெளியிட்டுச் சிறப்பித்தது! உழைப்போரால் தான் இந்த உலகம் இன்னும் கம்பீரமாகச் சுழன்றுகொண்டிருக்கிறது, என்றால் அது மிகையில்லை!!!


No comments: