Thursday, May 31, 2007

<>"வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்....."<>



இன்று உலக புகையிலை
இல்லா தினம்!



புகையிலை...புகை இல்லை..என்று புகையிலையை வெவ்வேறுவடிவங்களில் உபயோகிப்பவர்கள் சொல்லி அந்தப்பழக்கத்திலிருந்து தங்களைத் தாங்களே விடுவித்துக்

கொள்ளும் ஒப்பற்ற உறுதிமொழியைத் தாங்களுக்குத்

தாங்களே வாசித்து நிறைவேற்ற இன்று உகந்த நாள்!


"உலக புகை இல்லா சுற்றுச்சூழல்" என்ற கருப்பொருளைக் கொண்ட இந்த நாள் புகை பிடிப்போர் சிந்தனை செய்யவேண்டிய நாள்!உலகில் 67 விழுக்காட்டினர் இந்த புகையிலை என்னும் கொடிய நச்சை சுவைத்தும் சுவாசித்தும் தங்கள் சுவாசத்தை குறைத்துக்கொள்ள போட்டிபோடுகிறார்கள்!இந்தியாவில் 56 சதவீத ஆண்கள் புகையிலையை உபயோகிக்கின்றனர். கிராமப்புறங்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமான பெண்கள் புகையிலையை பயன்படுத்துகின்றனர்.

இளைஞர்களில் 40 சதவீதம் பேர் இக் கொடிய பழக்கத்திற்கு ஆட்பட்டுள்ளனர்.

இந்திய மக்கள்தொகையில் 20 கோடி ஆண்களும் 5 கோடி பெண்களும் புகையிலையைப் பயன்படுத்துவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
புகையிலைப் பழக்கம் என்பது புகையிலையை வெற்றிலையோடு மடித்துச் சுவைக்கவும், அதில் சில வேதிபொருட்களைக் கலந்து இனிப்பு புகையிலையை வாயில் போட்டு குதப்பிக்கொள்ளவும், பீடி, சிகரெட், பான் மசாலா, மூக்குப்பொடி என பல பெயர்களைப் பெற்று விளங்குகிறது. புகையிலையில் 4,000 வேதியியல் பொருள்கள் உள்ளன. அவற்றில் 55-க்கும் மேற்பட்டவை புற்றுநோய் உருவாக்கும் காரணிகள் என கண்டறியப்பட்டுள்ளன.

நுரையீரலில் வரும் 90 சதவீத புற்றுநோய்க்குப் புகையிலையே காரணம். வாய், நாக்கு, உணவுக்குழாய், கருப்பை, மூத்திரப்பை, வயிறு, சிறுநீரகம் எனத் தலை முதல் கால் வரை உள்ள முக்கிய உறுப்புகளில் புற்றுநோய் ஏற்படுத்துவதில் முன்னிலை வகிக்கிறது.

புற்றுநோய் மட்டுமின்றி இதயத்தில் மாரடைப்பு, நுரையீரலில் ஏற்படும் தீராத சளி, கால்களில் ரத்தக் குழாய்களில் அடைப்பை ஏற்படுத்துவது, ஆண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படுத்துவது என பல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

புகையிலைப் பழக்கம் உள்ளவர்களுக்கு வாயில் ஏற்படும் தீராத புண், வெள்ளை தழும்பு, சிகப்பு தழும்பு போன்ற வடுக்கள் உடம்பைப் பாழ்படுத்துகின்ற நிலை ஏற்படுகிறது.


பணம் கொழிக்கும் புகையிலைத் தொழில்!

அமெரிக்காவின் தென் மாநிலங்களில் சுமார் ஒரு லட்சத்து முப்பதாயிரம் பண்ணைகளில் புகையிலை சாகுபடி செய்யப்படுகின்றது. அநேகமாக, புகையிலை பயிரிடும் விவசாயிகள், புகையிலையை பணப்பயிராகக் கருதியே வளர்க்கின்றனர். அமெரிக்க அரசின்

விவசாயத் துறை, புகையிலைப் பயிரை ஒரு முக்கியமான பணப்பயிராகக் கருதி ஒருபுறம் சலுகைகளை வாரி வழங்குகிறது. காரணம், நீண்ட நெடிய விவசாய வரலாற்றில் தொடர்ந்து நாட்டின் ஏழாவது பணப்பயிராக புகையிலை இருப்பதும், ஏற்றுமதி செய்யக்
கூடிய பணப்பயிரில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றி
ருப்பதும்தான்! அதுமட்டுமல்ல, அமெரிக்க சிகரெட், சுருட்டு தயாரிப்பாளர்கள் அமெரிக்கப் பொருளாதாரத்தில் மிக
முக்கியமான பிரதான இடத்தைப் பெற்றிருப்பதும், அவர்களின்
உள் மற்றும் வெளிநாட்டு சந்தையை தரத்தோடு நிர்வகித்து கோடிக்கணக்கில் இலாபகரமான தொழிலாகவும் செய்துவரு
வதுதான்!

புகையிலை பிறந்ததும் வளர்ந்ததும்...

அமெரிக்காவைப் பொறுத்தவரை 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் புகைப்பிடிக்கும் கலாச்சாரம் முளைத்ததாகத் வரலாற்றுப் பக்கங்கள் தெரிவிக்கிறது. கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டு பிடித்த 1492களில் காய்ந்த புகையிலைச் செடியைச் சுருட்டிப் புகைப்பிடித்ததைத் தன் பயணக் குறிப்பில் தெரிவித்திருக்கின்றார். 1586ல் பிரிட்டனில் சர் வால்ட்டர் ராலே புகைப்பிடிக்க புகைக்குழாயைக் கண்டறிந்து அறிமுகப்படுத்தினார். 1881ல் சிகரெட் என்ற முதல் தயாரிப்பை இயந்திரத்தில் தயாரித்து அறிமுகப்படுத்திய பெருமை(!) அமெரிக்காவுக்கு உண்டு.

தடைகளை மீறி....

புகைப்பிடித்தல் உடல் நலத்திற்கு மிகக் கேடு என்ற புரிந்துணர்வை ஏற்படுத்த புகைப்பழக்கத்திற்கெதிரான இயக்கங்கள், புகைப்பிடிக்காதவர்களைக் கொண்டு புகையில்லாச் சுற்றுச்சூழலை ஏற்படுத்தலின் அவசியம், புகைப்பிடித்தலால் ஏற்படும் தீமைகளை வெளிப்படுத்தும் துண்டுப்பிரசுரங்கள் வினியோகித்தல், சிகரெட் அட்டைப்பெட்டியின் மேல் எச்சரிக்கை வாசகங்களைப் பொறிக்கவைத்தல், பொது இடங்களில் அல்லது பணியிடங்களில் சிகரெட் பிடிப்பதைத் தடைசெய்தல், வயதுக்குவராதவர்களுக்கு சிகரெட் விற்பனைசெய்தல் கூடாது போன்ற எண்ணற்ற தடைகளையும் மீறி புகைப்பிடிப்பதால் ஆண்டுக்கு 400,000 பேர் பலியாவதாக ஒரு புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது.

புகைச் சகதி என்ற புதைச் சேறில்....

புகைப்பிடித்தல் என்பது சிறுபிராயத்திலிருந்தே துவங்கிவிடுகின்ற பேராபத்தாகத்தான் உணரமுடிகிறது. ஒவ்வொரு நாளும் மூவாயிரம் அமெரிக்க இளையர்கள் இந்தப் பழக்கத்திற்கு ஆட்படுகின்றதாகவும் புகைப் பிடிக்கத் துவங்கும் பத்துக்கு ஏழு பேர் விட்டுவிடலாம் என்று எண்ணினாலும் அவர்களால் விடமுடியாத பழக்கமாக மாறி அவர்களை உடனிருந்து கொல்லும் நோயாக தொற்றிக் கொள்வதாக ஆய்வுகள் அமர்க்களமாகச் சொல்லுகிறது. பெரும்பாலான விடலைப் பருவத்தினர் புகைப்பிடிப்பதை ஒரு வீரதீரச் செயலாக எண்ணிக் கற்றுக்கொண்டு பின்னர் அதற்கு அடிமைப் பட்டுப்போகின்றதும் அப்படிக் கற்றுகொண்ட பேர்வழிகள், தான்பெற்ற இன்பம் பெறுக இந்த வையகம் என்ற பரந்த மனத்தோடு (!) தங்கள் வழிக்கு ஒத்து வராத அப்பாவிகளை பலவந்தமாகவும், அவர்களின் பலவீனங்களைக் காட்டியே இந்தப் புகைச் சகதி என்ற புதை சேற்றில் சிக்க வைக்கும் அவலமே நிகழ்வதாக சோகத்தோடு ஒரு செய்தி முன்னுரைக்கிறது.

தங்களைத் தாங்களே அழித்து...

பெற்றோர்களைப் பார்த்துத் தடம் மாறும் பிள்ளைகளும், சின்னஞ்சிறுசில் சிகரெட் குடித்துச் செத்தோர் உண்டா? தைரியமாக நீ, பிடி என்று புகைப்பழக்கத்தோடு உடன்பாடு செய்துகொள்கின்ற சிறார்களுக்குப் பின் விளைவுகள் அப்போது தெரிவதில்லை; பழகிவிட்ட பெரியவர்களோ, நிகோடின் என்ற நச்சுத் தேவதையை மரணம் தொடும் வரை விட்டொழிக்கத் தெரிவதில்லை. இன்னும் சில மங்கையர்கள் திலகங்களோ புகைப்பிடித்தால் குண்டாகமாட்டோம் என்று குருட்டுத்தனமான நம்பிக்கைகளுக்கு ஆளாகி தங்களைத் தாங்களே அழித்துக் கொள்ளுகின்ற ஆரவாரங்களும் துணுக்குச் செய்தியாய் பவனி வருகிறது.

அக்கறையுள்ள அரசுகள்....

பிரான்சு தேசம் சிகரெட் குறித்து எந்த விளம்பரமும் செய்யக் கூடாது என்று தடைசெய்து அறிவித்துள்ளது.ஐரோப்பிய நாடுகள் முழுவதுமே புகைப்பிடித்தலுக்கெதிரான சட்டங்களைக் கொண்டுவந்துள்ளது. 1971லிருந்து பிரிட்டன் சிகரெட் பெட்டியில் சிகரெட் குடித்தல் உடல் நலத்திற்கு கேடு என்று அறிவிப்பை வெளியிட்டுத்தான் சிகரெட்டை விற்கவேண்டும் என்று சட்டம் இயற்றியுள்ளது. இத்தாலி பொது இடங்களில் புகைப்பிடித்தலைத் தடை செய்துள்ளது.

நச்சு நாகம் நிகோடின்....

அப்படி என்னதான் இந்தச் சிகரெட்டில் இருக்கிறது? மனிதனை மரணத்தின் வாயிலில் தள்ள அத்தனை வலிமையா? இந்தச் சாதாரணச்சிகரெட்டுக்கு?!அடாடா, என்ன இப்படிக் கேட்டுவிட்டீர்கள்? ஒன்றா, இரண்டா எடுத்துச் சொல்ல? ஒராயிரமா, ஈராயிரமா? நாலாயிரம் நச்சு மறைந்துள்ள நாகம் அது என்றால், மிகையல்ல;
கார்பன் மோனாக்சைடு, ·பார்மல்டிஹைடி(formaldehyde), அம்மோனியா, கார்பண்டை ஆக்சைடு, அலுமினியம், காப்பர், லெட், மெர்குரி, துத்தநாகம் உட்பட அனேக நச்சு உலோகக் கலவைகள் இதில் பொதிந்துள்ளது.

நச்சு விளம்பரங்களுக்கு....

இவ்வளவு நச்சு இருக்கிறது என்று அறிந்தும் இதைச் சுவாசிக்க யாராவது மனமொப்புவார்களா? அமெரிக்காவில் இறக்கும் ஆறில் ஒருவர் புகைப்பிடிப்பதால் என்பது நீக்கமற அறிந்த உண்மை. ஒவ்வொரு வருடமும் 1.5 மில்லியன் அமெரிக்கர் புகைப்பிடிப்பதை நிறுத்திவிடுகின்றனர். கேட்கவே இனிமையாக இருக்கிறதே, என்கிறீர்களா? அவசரப்படாதீர்கள். அடுத்த அதிர்ச்சியை நான்சொல்கிறேன். 50 மில்லியன் புதிய புகைப்பாளர்கள் உருவாகிவிடுகிறார்களே!

புகைபிடிப்பாளிகளை கவர்ந்திழுத்து புகைக்க வைக்க, நான், நீயென்று பன்னாட்டு சிகரெட் நிறுவனங்கள் ஒவ்வொரு நிமிடத்திற்கும் செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா? 5,000 டாலர்கள்!
கவர்ச்சி விளம்பரத்துக்குப் பலியாகி, சிகரெட் மோகத்திற்கு அடிமையாகித் தங்களையே சிதைத்துக் கொள்ளும் மனிதர்கள் தங்கள் உடற் கேட்டிற்குச் செலவழிக்கும் தொகை வருடத்திற்கு 65 பில்லியன் டாலர்கள்...ஏ...அப்பா என்று வாய் பிளக்க வைக்கிறதா?
வியாதிகள் பலவிதம்....

நுரையீரல் வியாதி, நுரையீரல் புற்று நோய்(85சதம் குணப்படுத்த இயலாதது என்பது குறிப்பிடத்தக்கது), மூக்கடைப்பு, மூக்கு, தொண்டை சிவந்தும் தடித்தும் ஏற்படும் நோய் உட்பட பெயர் வாயில் நுழையா நோய்கள் 80 முதல் 90 சதம் நோய் புகையுறிஞ்சுவதால் மட்டுமே வருகிறது.

சிகரெட் புகைப்பவர்களில் முப்பது விழுக்காடு இதய நோய் பாதிப்பால் விழுந்து அல்லலுறுகின்றனர். சிகரெட்டில் உள்ள கார்பன் மோனாக்சைடு என்ற நச்சுதான் இதற்கு முழு முதற்காரணம். உறிஞ்சுகின்ற புகை இதயத்திலிருந்து இரத்தத்தை உடலெங்கும் எடுத்துச் செல்கிற இரத்தக் குழாய்ச் சுவரின் உட்பகுதியை தடிமனாக்கிவிடுகிறது. இதனால் இரத்த ஓட்டம் சீராகச் சென்றடைய முடியாமற் பிரளயத்தை ஏற்படுத்தி மரணத்தின் அழைப்பு மணியை அடிநாதமாய் ஒலிக்க வைக்கின்றது.

நிகோடின் என்ற நச்சு, இரத்த அழுத்தம், இதயத் துடிப்பு, பிராணவாயுத் தகராறு என்று மெல்லக் கொல்லுகின்ற பேராபத்துக்கு அடித்தளமிடுகிறது.புகையுறிஞ்சல் அதிகரிக்கும்போது நெஞ்சுவலியும் திடீர் மாரடைப்பும் ஏற்படுகின்ற கொடூரம் நிகழும்.
இரத்தம் உறை நிலை (Blood clots) என்பது புகைப் பிடிக்காதவர்களை விட புகைப்பிடிப்பவர்களுக்கு எளிதில் ஏற்படுகின்ற வாய்ப்பு அதிகமுண்டு.

புற்றுநோய்...ஒருவர் புகைப்பதால்உதடு, நாக்கு, வாய், உமிழ் நீர்ச் சுரப்பிகள்(salivary glands), மூச்சுக்குழலின் மேற்பகுதி(larynx), தொண்டையிலிருந்து வயிற்றுக்கு உணவை எடுத்துச் செல்லும் குழாய் (esophagus) மற்றும் அதன் நடு இறுதிப் பகுதி புற்று நோய் தோன்றும் பகுதிகளாகும்.வயிற்றுப் புற்று நோய், சிறுநீரகப் புற்றுநோய், அறிகுறி தென்பட்டாலே அது புகையுறிஞ்சியால் வந்த வினை என்று தெரிந்துகொள்ளலாம். புகையுறிஞ்சலுக்கும் லுக்கேமியா என்ற வியாதிக்கும் மிகுந்த தொடர்புள்ளது.

பெண்களுக்கு...
புகைப்பழக்கமில்லாத பெண்ணை விட, புகையுறிஞ்சும் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு முன்பாகவே மாதவிலக்கு நின்றுவிடும் அபாயம் ஏற்படும். புகையுறிஞ்சும் பழக்கமுள்ள பெண்களுக்கு நிகோடின் நச்சு ஹார்மோன்கள் சுரப்பிகளைச் செயலிழக்க வைப்பதில் பெரும்பங்கு வகிக்கின்றது. எலும்பு உறுதியற்ற அல்லது எளிதில் உடைந்துவிடுகின்ற தனமையையும் (osteoporosis) ஏற்படுத்தும்.
கொடிது கொடிதுஅடுத்தவர் ஊதும் புகையைச் சுவாசிப்பது....
நான் புகைப்பிடிக்கும் பழக்கமில்லதவன் என்று மார்தட்டிக் கொள்ளுபவர்களே! நீங்கள் கூட புகைப்பிடிப்பவரிடமிருந்து விலகி இருக்காவிடில் பிறர் ஊதித்தள்ளும் புகையை நீங்கள் சுவாசிக்க நேரும் சந்தர்ப்பங்கள் அதிகமானால் உங்களையும் நோய் நெருங்கும் சந்தர்ப்பங்கள் அதிகமாகும் என்பதை நீங்கள் அறிந்து கொள்வது காலத்தின் கட்டாயம்.

புகைப்பழக்கமில்லாத, ஆனால் பிறர் விடும் புகையை உள்ளிழுத்துக் கொண்டவர்களைச் சாவு அரவணைத்துக் கொண்டோரின் எண்ணிக்கை வருடந்தோறும் அமெரிக்காவில் 53,000 பேர்! இதில் மிக மோசமான கார்டியோவாஸ்குலர் நோய் தாக்கியிருந்ததாக அறியப்பட்டோர் மட்டும் 37,000 பேர்!!

புகைப்பிடிப்பவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு எவ்வளவு கெடுதல்களை ஏற்படுத்துமோ, அதைவிடக் கொடிது அவர்கள் ஊதித்தள்ளும் புகையை சுவாசிப்பதும் உறிஞ்சுவதும் ஆகும்.

வீட்டில் புகையை ஊதித்தள்ளுவதால், கைக்குழந்தைகளும், சிறார்களும் அந்தப் புகையால் அவர்களின் இளந் திசுக்களும் சீர்கெடுவதோடு, அவர்களும் பலவிதமான நோய்த் தாக்குதல்களுக்கு ஆளாக நேரிடும்.
ஒவ்வொருவருடமும் அடுத்தவர் ஊதித்தள்ளும் புகைக்குப் பலியாகிறவர்கள் நியூ மெக்சிக்கோவில் மட்டும் 2,000 பேர் என்பது அமெரிக்க மாநிலங்களிலேயே மிக அதிகமாகும்!

வல்லமை படைத்த இனிய விரோதி....

நிகோடின் நஞ்சு வயோதிகத்தை வரவழைக்கும் வித்தைக்காரன். இரவுத் தூக்கத்தை குறைக்கும் மாபெரும் அரக்கன் இந்த நிகோடின். உண்ட உணவு செரித்துவிடக்கூடாது என்பதில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ளும் சுய நலவாதி! அடுத்தவர் உறக்கத்தை உண்டு இல்லையென்று செய்துவிடும் குறட்டையைப் பரிசாகத் தந்திடும் இனிய விரோதி! புகை உங்கள் இனிய குரலை கரடுமுரடாக மாற்றிச் சாகசம் செய்ய வைக்கும்! அதிலும் பெண்கள் குரலை ஆண் குரலுக்கு இணையாக மாற்றி அற்புதச் சாதனை படைக்க வல்லது! புகைப்பிடிக்கும் பெண்களுக்கு, புகைபிடிக்காதவர்களை விட 7 மடங்கு முகத்தில் முடி வளருகின்ற அரிய வாய்ப்பை வழங்கும் வல்லமை படைத்தது.

இன்றைக்கு, புகையுறிஞ்சுவதும், புகையிலையை மென்று உள்ளே தள்ளுவதும் எவ்வளவு உயிராபத்து என்று அறிந்து கொள்ளுகின்ற வாய்ப்பை உலகில் அரசும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் அளப்பறிய பணியாற்றி வருவதை அறியும் போது மனதிற்கு ஆறுதலளிப்பதாக இருக்கின்றது.

வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும்.....புகை பிடிக்கும் பழக்கத்தால் இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 8 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். ஆண்டொன்றுக்கு 400,000 உயிர்ப் பலிகளை நிகழ்த்தும் எமனாக சிகரெட் அமெரிக்காவில் உள்ளது என்பது எந்தக் கலப்புமில்லா உண்மை. அதாவது ஒவ்வொருநாளும் 1,100 பேர் பலியாகின்றனர்.

புகைப்பிடிப்பவர்களிடம் ஒரு கேள்வியை முன் வைக்கலாம். ஒவ்வொரு நாளும் விமான விபத்தில் 1,100 பேர் விழுந்து செத்துப் போகிறார்கள் என்றால் யாராவது விமானப் பயணத்துக்கு உடன்படுவார்களா? அதைப் பிடிப்பதால் மரணம் நிச்சயம் என்று நிர்ணயிக்கப்பட்ட நிதர்சனமான உண்மை! பிடித்ததைப் பிடிக்காமல் செய்யுங்கள்; உங்களை உடும்புப் பிடியாக பிடித்துக் கொண்டுள்ளதை கண்காணாத தூரத்திற்கு தூக்கி வீசுங்கள்; நல்ல காற்றைச் சுவாசிக்க உங்கள் சுவாசப் பைகளுக்கு சுதந்திரம் கொடுங்கள். உங்கள் கை விரலிடுக்கில் தப்பித் தவறி நுழைந்துவிடாமற் பார்த்துக் கொள்வது உங்கள் பொறுப்பு; புகை வலையங்களுக்குள் சிக்கிக் கொள்வதில்லை என்று நீங்கள் முடிவெடுத்துவிட்டால் உங்கள் வெல்ல உயிரை வெல்லத் துடிக்கும் எமனிடமிருந்து விலகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கை வாழ்வதற்கே, வீழ்வதற்கல்ல என்று நிரூபியுங்கள். குறைந்தபட்சம் இந்த ஒரு நாளாவது புகைப்பிடிக்கும் பழக்கத்தைஒத்திவைக்க யாரேனும் தயாராக இருக்கிறீர்களா? இந்தக் கட்டுரையைப் படித்து ஒருவராவது புகைப்பிடிப்பதை நிறுத்தினால் அதுவே ஒரு துவக்க வெற்றி என்று கருதலாம்! புகையிலை, புகைப்பழக்கம், புகையிலை உற்பத்தி, புகையிலை தரும் நோய் குறித்து அறிந்து நம்மால் ஒருவரை புகைப்பிடிப்பதிலிருந்து நிறுத்த இயலுமெனில் செய்வோமே!!

புகைப்பிடிப்போர் எப்படி அதை நிறுத்துவது என்பதை அறிய இந்த இணையத்தளம் சென்று பாருங்கள்!

http://www.smokefreelife.com/gclid=CJTkwZrwuIwCFQlQWAodBztKSg

*****************

No comments: